Friday, May 20, 2011

பாரதத் தாய்கள்

பாரதத் தாய்கள்

உனை எந்நேரமும்
மறவாதிருக்க
துயரத்தையே தந்துகொண்டிருக்க
வேண்டிக்கொண்ட
பாண்டவர் அன்னையை
தலைவலி பல்வலி
இதயவலி இடுப்புவலி
இன்னும் இன்னும்
உச்சிமுதல் உள்ளங்கால் வரை
சொல்லொண்ணா உபாதைகள்
விட்டுவைத்த
மாயம்தான் என்ன

கொண்ட கணவன்
குருடன் ஆதலால்
வாழ்நாள் முழுதும்
கண்ணைக் கட்டி
பார்வையை
மகாத்தியாகம் பண்ணி
தர்ம பத்தினியாய்
வாழ்ந்து முடித்த
கௌரவர் அன்னையே
எங்களூரில்
கோயில் கொண்டு
இன்றும் அம்மனாய்
வாழ்கிறாய்
அருள் பாலிக்கிறாய்
ஆனால்
உன் புத்திரர்கள்
நூற்றியொன்றுபேர்களில்
ஒருவருக்குக் கூட
உன் சத்க்குண சம்பத்தில்
துளியிலும் துளியேனும்
அளிக்கப்பெடாததின்
மர்மம்தான் என்ன

நீல பத்மநாபன்
16 ஏப்ரல் 2011